Sunday 1 November 2015

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..[ஜோ...க்...ஸ்]

திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.






அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

Monday 18 May 2015

அட மக்குப் புருஷா

 
 
இரவு நேரம், மனைவியின் செல்போனில் பீப் என ஓசை வருகிறது. 
எடுத்துப் பார்த்த கணவர் கோபமாகி விட்டார். 
கணவர்: யாருடி இந்நேரத்துக்கு உனக்கு பியூட்டி புல்னு மெசேஜ் அனுப்பி இருக்கறது ? 
மனைவி: அட மக்குப் புருஷா, அது பியூட்டி புல் இல்ல, பேட்டரி புல்...
 நல்லாப் பாரு கணவர்: !!???

Friday 15 May 2015

மனைவி வளர்க்கும் நாய்

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது
 
அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
 
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
 
கடுப்பான குமார்,
அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்
வீட்டில் நாய்..!!
 
மூன்றாம் நாள்
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.
 
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த 
நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.
 
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் 
செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.
 
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.